ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Saturday 19 July 2014

செல்லத்தங்கம் !

”சனியனே, இந்த தடவையும் கணக்கு பாடத்துல கோட்ட விட்டுடியா? அந்த 2 மார்க் வாங்கித் தொலைஞ்சா தான் என்ன? எப்ப பாத்தாலும் 98 மார்க், அடிப்பாவி அறிவியல்ல என்ன டி ஆச்சி வெறும் 95, இப்டியே போனா நீ பிச்ச தான் எடுக்கணும் பாப்பு !” என்று சலித்துக்கொண்டே தன் மகளை திட்டி தீர்த்தார் சீதா.
“கொழந்தைய அ
ப்படி எல்லாம் திட்டாதீங்க ! பாவம் பரீட்ச நேரத்துல பயத்துல ஏதாவது தப்பு பண்ணி இருப்பா !”, என்று அவருக்கு ஆறுதல் கூறினார் புதிதாக அந்த காலனிக்கு குடித்தனம் வந்திருந்த கோமதி.
”உங்களுக்கு என்ன? உங்க புருஷன் மேனேஜரா இருக்கிறார், உங்களுக்கு பணக்கஷ்டம்னா என்னன்னே தெரியாது, என் புருஷன் வெறும் கிளார்க் தானே ! எங்கள மாதிரி மிடில் கிளாசுக்கு தான் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் !” என்று புலம்பித் தள்ளினார் சீதா.
“ம்ம், சரி ! இன்னக்கி எங்க வீட்ல என் பாப்புசெல்லத்துக்கு பிறந்தநாள் விழா ! சாயங்காலம் 6 மணிக்கு வந்திடுங்க !”
“ஓ, சாரி இந்த சனியன் பண்ண பிரச்சனைல நான் பாட்டுக்கு டென்ஷனாகி ஏதேதோ பேசிட்டேன், சாயங்காலம் கண்டிப்பா வந்திடுவேன் !” என்றார் சீதா.
சாயங்காலம்...
”அடியே பாப்பு, சனியனே, சீக்கிரம் புறப்படு, மேனேஜர் வீட்ல எல்லாரும் வந்திருப்பாங்க, 7 கழுத வயசாகுது இன்னமும் உனக்கு சடபிண்ணிக்க கூட் நான் தான் வரணும், நீ எல்லாம் என்னக்கி படிச்சி, முன்னேறி என்னைய காப்பாத்த போற ! சனியனே, சனியனே !” என்று திட்டிக்கொண்டே பாப்புவை புறப்பட வைத்து மேனேஜர் மனைவி கோமதியின் வீட்டிற்கு வந்து அடைந்தார்கள்.
புதிதாக வந்தவர்கள் என்பதால் வீட்டில் அவ்வளவு கூட்டம் இல்லை. வீடு முழுவதும் பலூன், ரிப்பன் போன்ற பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோமதியின் குழந்தை பாப்புசெல்லம் கேக் முன்பாக அமர்ந்து இருந்தாள். அவளுக்கு வயது 10 இருக்கும்.
“கேக்க வெட்டு செல்லம் !” என்று கூறிக்கொண்டே பாப்புவின் கையை பிடித்து கேக்கை வெட்டினார் கோமதி.  ஒரு பக்கம் கோணலான வாயுடன், வாயில் ஜொல்லு ஒழுக, விநோதமான சிரிப்புடன் கேக்கை வெட்டினாள் பாப்புசெல்லம்.
இதை பார்த்துக்கொண்டு இருந்த சீதாவுக்கு கண்கள் திடீரென குபுக் என நீரை வெளியேற்றின. தனியாக வெளியே சென்று அழுதுவிட்டு பின்பு மீண்டும் வீட்டிற்குள் வந்தார் சீதா.
எல்லோரும் சென்ற பிறகு கோமதியிடம் அமைதியாக நின்றார் சீதா, “எப்படி?...” என்று கேட்டு முடிப்பதற்குள் கோமதி தொடர்ந்து பேசினார்.
“பாப்பு செல்லத்துக்கு டவுன் சின்ட்ரோம், குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே இவள அபாஷன் பண்ணிட சொல்லி நெறைய பேர் சொன்னாங்க ! ஆனா  நாங்க ஒரு உயிர கொல்லக்கூடாதுன்னு விட்டுட்டோம் !”
“இது சரியாகவே ஆகாதா?” கரிசனையுடன் கேட்டார் சீதா.
“நல்ல பயிற்சியாளர் வெச்சி பயிற்சி கொடுத்தா, தானா டாய்லெட் போகவும், தனக்காக சின்ன சின்ன வேலைகள் செய்யவும் கத்துக்கலாம், அதுக்கு மேல ஒன்னும் செய்ய முடியாது !”
“நானா இருந்தா கருவிலயே களைச்சி இருப்பேன் !”
“இவ கடவுளோட மகிமையை சொல்றதுக்காக பிறந்த குழந்த, இவள எப்படி கொல்றது”
“என்னது கடவுளோட மகிமையா?”
“நமக்கு லாபம் இல்லனு தெரிஞ்சாலும் ஒரு உயிர் மேல நாம காட்டுற அன்பு தான் உண்மையான அன்பு, தன்னோட மகன் சாகப்போறாருன்னு தெரிஞ்சே நமக்காக கடவுள் தன் மகனை தியாக பலியா கொடுத்து இருக்கிறாரு, அவர வணங்குற நாங்க இப்படி ஒரு உயிரை கொல்லலாமா? இந்த உயிர எங்கள நம்பி கடவுள் கொடுத்து இருக்கிறார், என் உயிர் இருக்கிறவரைக்கும் நான் என் பாப்புசெல்லத்த அன்பா பாத்துக்குவேன் !”
- சாம் 7