ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Tuesday 25 February 2014

புது வீடு

சபையில் சாட்சி நேரம் வந்தது. மைக் முன்னே வந்து தன்னுடைய சாட்சியை கூறினார்.
“நாங்க இவ்ளோ நாள் வாடக வீட்ல இருந்தோம், வீட்டு வாடகைய உரிமையாளர் ஏத்திட்டாரு, நாங்க வாடகைக்கு வீடு தேடப்போன இடத்தில எல்லாம் கிறிஸ்தவர்கள் சத்தமா ஜெபம் பண்ணுவாங்கன்னு யாருமே வீடு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஆனா கர்த்தரோட் கிருபையால ஒரு சொந்த வீடே குறைந்த விலைக்கு கிடைச்சுது” என்றார்
சபையார் அனைவரும் “அல்லேலூயா !” என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.
அடுத்த நாள் மைக் தன் மனைவி தேவியுடன் தன்னுடைய ”இயேசு இல்லம்” என்னும் தன் புது வீட்டிற்கு சென்றார். அன்றிரவு இருவரும் உறங்கிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று மாடியில் யாரோ ஓடும் சத்தம் கேட்டது. மைக் மற்றும் தேவி விளக்கை எடுத்துக்கொண்டு மாடி அறைக்குச் சென்றார்கள். ஆனால் மாடியில் யாரும் இல்லை. பூனை வருவதற்கும் வாய்பில்லாதவாறு வீடு பூட்டி இருந்தது. ஒன்றும் புரியாமல் இறங்கி வந்துவிட்டார்கள்.
அடுத்த நாள் இரவு இருவரும் உறங்கிக்கொண்டு இருந்தபோது, மைக் மீது ஒரு பூனை ஏறியது. அது மைக்கின் முகத்துக்கு அருகே வந்து, “டேய் வந்துட்டியா டா, ஒன்னைய நான் உயிரோட விட மாட்டேன் !” என்று சட்டையை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே கொண்டு சென்றது. அது தன் முன் காலை உயர்த்தி மைக் முகத்தை அடிக்கச் சென்றபோது, மைக்குக்கு தூக்கம் தெளிந்தது. நடந்தது கனவு என்பதை மைக் புரிந்துகொண்டார்.
அடுத்த நாள் மளிகை கடைக்கு சென்ற தேவி, தன்னுடைய வீட்டு முகவரியை சொல்லி, மளிகை சாமான்களை கொண்டுவரும்படி கூறினார். கடைக்காரரின் முகத்தில் உருவான அதிர்ச்சி, தேவிக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. “அம்மா, நீங்க அங்கயா தங்கி இருக்கீங்க?” என்றார் கடைக்காரர். தேவி பயத்தோடு, “ஆமாம், ஏன் கேக்குறீங்க?” என்றார். “இந்த வீட்ல பேய் சுத்துதும்மா, இந்த வீட்ல இதுக்கு முன்னாடி இருந்த எல்லாருமே ஏதோ ஒரு துர் சம்பவம் ஏற்பட்டதுக்கு அப்றம் தான் இந்த வீட்ட விட்டு போயிருக்காங்க!” என்றார்.
பயத்தோடு வீடு திரும்பிய தேவி, மைக் அலுவலகத்தில் இருந்து திரும்பியதும், வீட்டை பற்றி கூறினார். “அதெல்லாம் சும்மா!” என்று கூறியபோது, வீட்டின் மேல் புறத்தில் ஏதோ பாறாங்கல் விழுந்ததுபோல ஒரு சத்தம் கேட்டது. ஆனால் வழக்கம் போல மேலே எதுவும் இல்லை.
இதை தன் சபை பாஸ்டரிடம் சென்று மைக் தெரிவித்தார். அடுத்த மூன்று நாட்கள் சபையார் மைக்கின் வீட்டில் உண்ணா நோன்பிருந்து ஜெபம் செய்தனர்.
அருகில் இருந்த மளிகைக்கடைக்காரர் இதை எல்லா கவனித்துக்கொண்டு இருந்தார்.
சில மாதங்களுக்கு பிறகு, தேவியின் உடலில் சில மாற்றங்கள் தென்பட்டன, அவர் கர்ப்பமாக இருந்தார்
ஒரு வருடத்திற்கு பிறகு, மைக்கின் மகளுக்கு பெயர் வைக்கும் விழா நடந்தது
7 ஆண்டுகளுக்கு பிறகு, வீட்டிற்கு முன்பு செடி வளர்ப்பது எப்படி என்று மைக் தன் மகள் ஏஞ்சலுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது குழி நோண்டும்போது, சில தகடுகள் தென்பட்டன. ஏஞ்சல் மைக்கிடம் “என்னப்பா இது?!” என்று கேட்டாள், மைக்கின் முகத்தில் புன்னகை பூத்தது...

கதை எழுதியவர் : ஜெயசீலன் சாமுவேல்

No comments:

Post a Comment