ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Tuesday 25 February 2014

சிஸ்டர்


”சீக்கிரம் எந்திரி, நேரமாச்சி” என்று பியூலா என்னை எழுப்பிவிட்டாள். என் கண்கள் இரண்டிற்கும் இடையே கடுமையான இரும்புக்கம்பிகளை வைத்து கட்டியதைப் போல இருந்தது. மெல்ல என் கண்களை திறந்தேன். மிளகாய் பொடி கண்ணில் போட்டது போல் ஒரு எரிச்சல். ”அதற்குள் என்ன அவசரம், இப்போது தான் பாதி தூக்கம் முடிந்திருக்கிறது” என்பது போல என் தலைக்குள் ஒருவகையான உணர்வு. எப்படியோ தட்டுத் தடுமாறி நான் எழுந்து, குளித்துவிட்டு புறப்பட்டேன். என் கை பையில் சீருடையை எடுத்துக்கொண்டு, நான் தங்கி இருந்த விடுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றேன்.

அங்கே இருந்த என் தோழி ஷ்யாமலா வார்டில் இருக்கும் நோயாளிகளை பற்றி என்னிடம் கூறினாள். “நல்ல வேல வந்திட்ட, நல்லா கவனிச்சிக்கோ, இந்த வார்டுல முதல் படுக்கையில ஜான் செல்வராஜ்னு ஒருத்தர் இருக்காரு, சரியான காயம், இப்ப ஓரளவுக்கு சரியாகிரிச்சி, ஆனா எப்ப பாத்தாலும் பாட்டு பாடுறேன்னு பக்கத்தில படுத்து இருக்கிறவங்கள தொந்தரவு பண்ணிகிட்டே இருக்காரு”

நடுத்தர வயதை அடைந்திருந்த ஒரு நபர் அந்த படுக்கையில் இருந்தார்.

“இரண்டாவது படுக்கையில் ஒரு சிறுவன், பேரு வினோத். நேத்து பள்ளிக்கூடத்தில விளையாடும்போது, கால் தடுக்கி கீழ விழுந்ததுல முழங்கால்ல காயம். எழுந்ததும் இந்த மருந்த கொடுத்திரு” என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

மணி 10 ஆனது. மருத்துவமனையில் அமைதி நிலவியது. நோயாளிகள் இருந்த வார்டுக்கு அருகே உள்ள வரவேற்பு மேசையில் நான் அமர்ந்து இருந்தேன். அப்போது என் சிந்தனை பல இடங்களுக்கு அலைபாய்ந்துகொண்டு இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்திற்கு என் மனம் சென்றது. பள்ளி முடிந்து நான் வெளியே வந்துகொண்டு இருந்தேன், அப்போது வெளியே ஒரு க்டையில் அனைவரும் தேன் முட்டாய் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். நானும் ஆவலாக தேன் முட்டாய் வாங்கலாம் என்று சென்ற போது நடுவில் இருந்த சாலையையும், அதில் வேகமாக வந்துகொண்டு இருந்த தேசிய அனுமதிபெற்ற லாரி வருவதையும் கவனிக்கவில்லை. நான் தூக்கி எறியப்பட்டேன். இறந்துவிட்டேன் என்று தான் அனைவரும் நினைத்தார்கள் ஆனால், இல்லை. இதே மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றேன். அப்போது வெள்ளை அங்கி அணிந்தவர் ஒருவர் என் அருகே வந்தார். அந்த சர்ச் மருத்துவமனையின் அருட்தந்தை (Father) தான் அவர். அவரும் அவரோடு இருந்தவர்களும் எனக்காக ஜெபித்தார்கள். எனக்கு ஏ1பி நெகடிவ் வகை ரத்தம் தேவைப்பட்டதால், இந்த மருத்துவமனையை கட்டிய தேவாலயத்தின் கல்லூரியில் இருந்து இரவோடு இரவாக 8 மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்து எனக்கு ரத்தம் கொடுத்தார்கள். என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே

“ப்ராப்லம் சால்வ்டு, ப்ராப்லம் சால்வ்டு !
ப்ராப்லம் சால்வ்டு, மை ப்ராப்லம் சால்வ்டு !” என்று யாரோ ஒருவர் திடீரென்று பாடினார்.

நான் எழுந்து வேகமாக வார்டுக்கு சென்றேன், “ஜான் அண்ணே, கொஞ்சம் பேசாம இருங்க, மத்த நோயாளிகள் எல்லா தூங்குறாங்கல்ல !” என்றேன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, “ஏன்ணா அழுறீங்க !” என்று நான் கேட்டேன். “இல்லம்மா, என் இளநிரைய பாத்து,இப்டி அண்ணேனு கூப்டுட்டியே, அதான் அழுறேன் !” என்றார். “சார், காமெடி பண்ணாம போய் தூங்குங்க சார். இப்ப தான் தெரியிது, உங்க பொண்டாட்டி ஏன் இப்டி சப்பாத்தி கட்டயால விரட்டி விரட்டி அடிச்சாங்கனு” பின்பு அவர் உறங்கச் சென்றுவிட்டார்.

மருத்துவமனை வாசலில் ஒரு ஆம்பூலன்ஸ் வேகமாக வந்து நின்றது. அவசர அவசரமாக ஒருவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி வந்தார்கள். நானும் கீழே சென்று என்ன ஆயிற்று என்று பார்த்தேன். ஒரு இளைஞன் உயிருக்கு ஊசலாடிக்கொண்டு இருந்தார். நான் உடனடியாக ட்யூட்டி டாக்டருக்கு ஃபோன் செய்தேன். அந்த இளைஞனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றோம். அதிகமான இரத்த இழப்பு. ஏற்பட்டு இருந்தது. அவன் உடலில் வழிந்து வந்த இரத்தத்தை பஞ்சினால், தேய்த்து எடுத்தேன். மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளித்து. மயக்க மருந்து கொடுத்தார். இரவு நேரத்தில் குடிபோதையில் பைக்கை ஓட்டிச் சென்று புளியமரத்தின் மீது மோதி காயம் அடைந்திருந்தான். அவனும் எங்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவன் வினோத் திடீரென்று வலியால் கத்தினான். ”நான் அவன் அருகே சென்று அழுகாத வினோத் அக்கா இங்கதான இருக்கேன் !” என்று கூறி. அவனுடைய காயத்திற்கு மருந்து கொடுத்துவிட்டு. திரும்பவும் வரவேற்பு மேசைக்கு சென்றேன். மணி 2:30 தாண்டியபோது, தூக்கம் விழிகளையும், பசி வயிற்றையும் பிடித்து இழுத்தது. பக்கத்து அறையில் இருந்த சசியை சற்று பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, நான் மருத்துவமனை கேன்டீனுக்குச் சென்றேன்.

“அண்ணா ஒரு டீயும், பன்னும் குடுங்க !” என்றேன்
“வாம்மா இந்துமதி, நைட் ஷிஃப்ட் எல்லாம் எப்டி போகுது !”
“நல்லா போகுதுண்ணே !”
“நீங்க எப்டி ராத்ரி முழுக்க அடுப்பு பக்கத்திலயே இருக்கீங்க !”
”எல்லாம் பொலப்புக்காகத்தான், பழகிப்போச்சு மா !”
“நீங்க கிரேட் அண்ணா !” என்று கூறிவிட்டு வேகம் வேகமாக டீயையும், பன்னையும் சாப்பிட்டுவிட்டு என் வார்டுக்குச் சென்றேன்.

மணி ஐந்தை நெருங்கியது. கண்ணில் மீண்டும் அதிகமான எரிச்சல். சற்று நேரத்தில் நோயாளிகளை பார்க்க அவர்களுடைய உறவினர்கள் வந்துவிடுவார்கள்.
திடீரென்று விபத்தில் காயமடைந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரை நானும், இன்னும் இரண்டு கம்பவுண்டர்களும் சேர்ந்து, மீண்டுமாக அவசர சிகிச்சை அறைக்கு கொண்டு சென்றோம். இன்னும் 3 மணி நேரத்துக்குள்ள இவருக்கு அறுவைசிகிச்சை செய்யனும், அப்டியே செஞ்சாலும் பிழைக்கிறது கஷ்டம் தான் என்று மருத்துவர் கூறிவிட்டார். நோயாளியின் உறவினர்களுக்கு இதை நான் தொலைப்பேசியில் அழைத்து கூறினேன். என் மொபைலில் உள்ள முகப்புத்தகத்தில் “விபத்தில் காயமடைந்த ஒரு நோயாளி எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் அவருக்காக ஜெபிக்கவும்” என்று ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துவிட்டு, மருத்துவமனை சேப்பலுக்கு சென்று விபத்தில் அடிபட்ட அந்த நபருக்காக, ஜெபிக்கத்தொடங்கினேன். ஊரில் இருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. “நாளைக்கு தீபாவளி, சீக்கிரமா வந்துடுடீ, என்ன வேலை எல்லாம் முடிஞ்சிருச்சில்ல” என்று அம்மாவின் குரல். “இப்ப தான் ட்யூட்டி முடிச்சிச்சு, இன்னும் கொஞ்ச நேரத்தில புறப்பட்டு வந்திடுறேன்” என்று கூறிவிட்டு, நான் சேப்பலில் இருந்து வெளியேறினேன்.

நான் சென்ற பிறகு, ஜான் அண்ணன் அருகே ஒரு பேப்பரும் பேனாவும் இருந்தது, அதில் “தயவுசெஞ்சி பக்கத்தில இருக்கிறவங்கள தொந்தரவு பண்ணாம, பாட்டு எழுதுங்க, பாடாதீங்க” என்று எழுதி இருந்தது. வினோத் அருகில் ஒரு கால்பந்தாட்ட வீரர்களின் படம் உள்ள ஒரு விளையாட்டு கார்டை பார்த்தான்.

மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது. இரண்டு இளைஞர்கள் எதிர் திசையில் வந்தார்கள். “சிஸ்டர், செமயா இருக்குதுல்ல” என்றான் ஒருவன். “சிஸ்டர்னா தங்கச்சி டா லூசு” என்றான் இன்னொருவன்.
“நானே தூக்கமும் பசியும் தாங்கமுடியாம, போய்கிட்டு இருக்கேன், இதுல இவனுங்க வேற”

- கதை எழுதியவர் : ஜெயசீலன் சாமுவேல்

No comments:

Post a Comment